பெண்களின் சபரிமலை எனப்படும், கேரள மாநிலம் திருவனந்தபுரம் கிள்ளியாற்றின் கரையில் அமைந்த ஆற்றுகால் பகவதி அம்மன் கோவிலில் நடந்த மாசி திருவிழாவில் ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.மதுரையை எரித்த கண்ணகி கொடுங்கல்லுார் செல்லும் வழியில் கிள்ளியாற்றின் கரையில் தங்கியதாகவும், பின்னர் முதியவரின் கனவில் வந்து கூறியதன் அடிப்படையில், இங்கு அவருக்கு கோவில் எழுப்பியதாகவும் தல வரலாறு கூறுகிறது.
இதற்காக கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பெண்கள் கோவிலை சுற்றிலும் சுமார் 10 கி.மீ., துாரம் அடுப்பு ஏற்றி பொங்கல் வைத்தனர். வெள்ளை அரிசி, சர்க்கரை பாகு, புட்டு போன்றவற்றை தயாரித்தனர். மதியம் 2:00 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்ட நூற்றுக்கணக்கான பூஜாரிகள் தலையில் தீர்த்தம் தெளித்தனர்.