மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்ய இடைக்கால நிவாரண நிதியாக ரூ.5,060 கோடி ரூபாய் வழங்கக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், மிக்ஜாம் புயலால், கடந்த 2,3 மற்றும் 4 ஆம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை பெய்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனால் சென்னை மாநகராட்சி உட்பட 4 மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குறிப்பாக சாலைகள், பாலங்கள், கட்டடங்கள் சேதம் அடைந்திருப்பதால், லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தமிழ்நாட்டிற்கு இடைக்கால நிவாரண நிதியாக ரூ.5,060 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறியுள்ளார். விரிவான சேத அறிக்கை தயார் செய்யப்பட்ட பிறகு, கூடுதல் நிதி கோரப்படும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.