ஹமாஸ் இந்த உலகத்திலிருந்து துடைத்து எறியப்படும் என இஸ்ரேலின் தலைவர்கள் சூளுரைத்துள்ளனர். காஸா இதற்கு முன்பு இருந்த நிலைக்கு மீண்டும் திரும்பாது என்றும் கூறியுள்ளனர்.
“ஒவ்வொரு ஹமாஸ் ஆளும் செத்து மடிவார்” என்று ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். ஹமாஸின் “தீவிரவாத இயந்திரம்” மற்றும் அதன் அரசியல் கட்டமைப்பு முழுவதும் தகர்க்கப்படும் என்று உறுதிபூண்டார்.
தனது இந்த இலக்குகளை அடைய தரைவழி தாக்குதலை விரிவுபடுத்தியிருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஹமாஸ் ஒழிக்கப்பட்டதாக இஸ்ரேல் திருப்தியடையும் போது, காஸாவிலிருந்து இஸ்ரேல் வெளியேறும். இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலண்ட், “புதிய பாதுகாப்பு அமைப்பு” குறித்து பேசுகிறார், அதில் அன்றாட வாழ்வில் இஸ்ரேலுக்கு எந்த பங்கும் இருக்காது என்றும் கூறுகிறார்.
‘ஆப்ரேன் ஸ்வார்ட்ஸ் ஆப் ஐயன்’இன் நோக்கம், காஸாவில் இதுவரை ராணுவம் திட்டமிடாத வகையிலான லட்சியத்தை கொண்டுள்ளது. இதை அடைய பல மாதங்கள் ஆகலாம். ஆனால், இந்த இலக்குகள் யதார்த்தமானவையா? இஸ்ரேலின் படைத்தளபதிகள் இதனை எவ்வாறு அடைய போகிறார்கள்?
காஸாவுக்குள் நுழைவது என்பது வீடுவீடாக சென்று சண்டையிடுவதாகும். இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் உயிருக்கு ஆபத்தானதாகும். ஹமாஸ் ஆட்சி புரியும் காஸாவில் உள்ள அதிகாரிகள், இதுவரை 8 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், பல ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் கூறுகின்றனர்.
இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கு காஸாவில் அடையாளம் காண முடியாத இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் 230 பணயக் கைதிகளை மீட்கும் பொறுப்பும் உள்ளது.
“ஒவ்வொரு ஹமாஸ் உறுப்பினரையும் இஸ்ரேலால் அழிக்க முடியாது. ஏனென்றால் அது தீவிரவாத இஸ்லாமின் கருத்தாகும்” என இஸ்ரேலின் ராணுவ வானொலியின் ராணுவ நிபுணர் அமிர் பர் ஷாலோம் கூறுகிறார். “ஆனால், இயங்க முடியாத அளவுக்கு அதை வலுவிழக்க செய்ய முடியும்” என்றார்.