திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு ரூ.1,120.5 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டப்பணிகள், ரூ.70.43 கோடி மதிப்பீட்டில் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த 165 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள், ரூ.53.48 கோடி மதிப்பீட்டில் புதிய பல்நோக்குகூடம் மற்றும் ரூ.12.87 கோடி மதிப்பீட்டில் புதிய பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், தந்தை பெரியாரும், பெரறிஞர் அண்ணாவும் முதல் முதலில் சந்தித்த இடத்திற்கு அரசு முறை பயணமாக முதல் முறை வந்திருப்பதாக கூறினார். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என திருப்பூரை மையமாக வைத்து தான் சொல்லியிருப்பார்கள் என்றார். நான் உட்பட முதலமைச்சர் வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் என கூறினார்.
நாம் மத்திய அரசுக்கு கொடுத்த 6 லட்சம் கோடி ரூபாய் வருவாயில் நமக்கு திரும்ப கிடைத்தது 1 லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே குற்றம் சாட்டினார். தமிழ்நாடு மத்திய அரசுக்கு 1 ரூபாய் கொடுத்தால் 29 பைசா மட்டுமே திரும்பி வரும் நிலையில், நெருக்கடியிலும் மக்களுக்கான திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி வருவதாக கூறினர்.