
டபிள்யூ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் ஏலத்தில் பங்கேற்க 409 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 1,525 வீராங்கனைகள் இதற்காக விண்ணப்பத்திருந்த நிலையில் அவர்ளில் இருந்து 409 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருந்து சுமார் 120 வீராங்கனைகள் 5 அணிகளுக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வெற்றியையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்தாண்டு முதல் டபிள்யூ.பி.எல். எனப்படும் விமன்ஸ் ப்ரீமியர் லீக் 20 ஓவர் போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. தற்போது வரை 5 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 5 அணிகளும் ரூ. 4 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன.
இவற்றில் அகமதாபாத்தின் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை அதானி ஸ்போர்ட்ஸ்லைனும், மும்பை இந்தியன்ஸ் அணியை இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், பெங்களூரு அணியை ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், டெல்லி அணியை ஜே.எஸ்.டபிள்யூ – ஜி.எம்.ஆர். கிரிக்கெட் நிறுவனமும், லக்னோ அணியை கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்துள்ளன. அணிகள் உருவாக்கத்தை தொடர்ந்து வீராங்கனைகள் ஏலத்தில் எடுக்கப்படவுள்ளனர். இந்த ஏலம் வரும் 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதல் டபிள்யூ.பி.எல் கிரிக்கெட் தொடர் மார்ச் 4ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவித்துள்ளது.