
இந்திய மைதானங்களில் பந்து வீசுவது சவாலான விஷயம் என்று ஆஸ்திரேலிய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் லேன்ஸ் மோரிஸ் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுடன் 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளது. இந்த போட்டிகள் அடுத்த மாதம் 9ஆம் தேதி தொடங்குகின்றன. இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால் இந்த கிரிக்கெட் தொடர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்க அணியை டெஸ்ட போட்டியில் வீழ்த்திய மன நிலையுடன் ஆஸ்திரேலிய அணி களத்தில் இறங்கவுள்ளது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர் வெற்றிகளை குவித்து வருவதால் ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் லேன்ஸ் மோரிஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்திய மைதானங்கள் மிகச்சிறந்தவை அல்ல. எனவே அங்கு பந்து வீசுவது எங்களுக்கு மிகுந்த சவாலாக இருக்கும். ஆஸ்திரேலிய அணியில் அனுபவம் மிக்க வீரர்கள் உள்ளனர். இளம் வீரரான எனக்கு இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.